செவ்வாய், 13 செப்டம்பர், 2022

 

4 சாத்தான்களோடு நெருக்கமாகவும்

கடவுள்களை

மிக நீண்டதூரத்திலும்

 நிறுத்தி சுழல்கிறது

இம்மாய இணைய உலகு

5

 ஒரு சொல்

வாழ்வை

உறையச் செய்துவிடுகிறது

 சுழன்றாடும்சுடரை

ஊதி அணைக்க

 அச்சொற்களே

 காற்றாக மாறிவிடுகின்றன

 

7

நீங்கள் எதிர்பாராத

ஒரு தருணத்தில்

உங்களை

 மலரச் செய்வதுதான்

 பூக்களின் இயல்பு...

8

விளையாட்டை

 விளையாட்டாகவே

 கடந்துவிடும் பக்குவம்

குழந்தைகளுக்கே உரித்தானது

 விளையாட்டைவினையாக்குவதும்

பெரும் விலையாக்குவதும்

 பெரியோர் செய்யும்

பெருந்தீங்காகும்....

9

 ஒரு கேள்வி

எல்லோருக்குமான பதிலை தந்திருக்கிறது

 அதிகாரத்தின் செவிகளில்

எட்டிய கூக்குரலில்

 ஒரு இனத்தின் கண்ணீரே

துடைத்தெறியப்பட்டிருக்கின்றது

ஆராய்ச்சி மணிகள்

 எழுப்பிய சத்தம்

ஒரு அரசாங்கத்தை தூங்கவிடாமல்

நீதி வழங்க செய்திருக்கின்றது....

 10

 பின்புலத்தின்

 வெளிச்சத்திலிருந்து

கவனம் பெறுகின்றன

 ஒரு சில பூக்கள்

 11

 மதங்கொண்ட யானைகளாய்

 மக்கள் மாறத்துவங்கினால்

காடுவெட்டிகளை

நாடு வெட்டத் துவங்கிவிடும்...

 

12

அணைந்து

விடக்கூடாது எனும்

 விரல்களின் பெருந்தவிப்பும்

அணைத்தே தீர்ப்பது எனும்

பெருங்காற்றின்

 உதடுகளுக்கும் இடையே

ஊடாடிக் கிடப்பதுதான்

வாழ்வெனும் பெருந்துயரம்...

 

15

மேகங்களுக்கு

கிறுக்கு பிடித்தாற்போன்று

திடீர் திடீரென

பெருமழை பெய்து

 நகர வீதிகளை

 குளக்கரை ஆக்கிவிடுகின்றது

அதில் மல்லாந்து படுத்துக்கொண்டு

காகித கப்பல்களும்

 குழந்தைகளுடன்

 கும்மாளமிடுகின்றது....

17

நீரால்

 ஒரு நகரம்

முற்றுகையிடப்படும்போது

நாடாண்ட மன்னர்களால்

 அந்நிலம்

 சூறையாடப்பட்டது

 அம்பலமாகின்றது...

 18

இரவெலாம்

மழையின் நடனம்

குளிர்ந்த தேகம்

தனை மறந்து தாளமிடுகிறது

ஒரு கோப்பை

குளிர்ந்த இரவை

கதகதப்பாக்கலாம்...

 19

 அரும்பிலிருந்து

சருகாய் உதிரும்

வாழ்விற்கு

மலர்வளையம் தயாரிப்பதே

மானுடத்தின் பேரியல்பு

20

 எலிகளின் உலகத்தில்

பூனைகளே

 சிறப்பு விருந்தினர்

21

 சிட்டுக்குருவிகளின்

 சிறகை நனைத்து விட்டு

 ஆகாயம்

 அழுதுகொண்டிருக்கிறது

ஈரமற்று

22

 முரட்டுப்பாறைகளையும்

 முட்டி எறிந்து

துளிர்ப்பதொன்றுதான்

வீரிய விதைகளின்

போர்க்குணம்...

23

 கூழாங்கற்களால்

கட்டி எழுப்பப்பட்ட

கோபுரமொன்று

 சிறு காற்றிற்கு

உருக்குலைந்து

 விடுவது போன்றதுதான்

நொடிப்பொழுதில்

சிதைந்துவிடுகிறது

அன்பற்ற கொடுஞ்சொல்லால்

 சிலர் வாழ்வு...

 24

 அலையாடுகின்ற கடலில்

மலைமுகடின் நுனியில்

அமர்ந்தெழுகின்ற தவம்

 புத்தனுக்கும் கிட்டாத

ஓர் வரம்...

25

 கடலலைகளின்

ஏக்கப் பெருமூச்சு

 வெண்சங்கின் இசையாய்

வழிந்தோடுகிறது

 ஆழ்கடலின் துயரங்களை

 உள்வாங்கிபாடுவதற்கு

சங்கநாதமே சாட்சி...

26

 சொக்கப்பனை கொளுத்தி

ஊர் குளிர்காய்கிறது

 சுட்டியிலிட்ட சுடர் யாவும்

வாடை தாங்காமல்

காற்றில் நடுநடுங்கி

சுழன்றாடுகிறது

 ஒளிவீசிய தீபங்கள் யாவும்

காரிருள் பரப்பி

 ஆழ்துயில்கொள்கின்றன...

27

வெண்ணிறவு வேளைகளில்

ஊர் சுற்றியலையும்

 சுடலைமாடசாமிகளின்

 கோடங்கி சத்தம்

 உலகையே தின்று செரித்து

குளிர்சாதன அறைகளில்

 பிணம்போல் உறங்குவோரை

ஒருபோதும் எழுப்பியதில்லை...

28

 யானைகளின்

வழித்தடமெங்கும்

எறும்புகளின் சமாதிகள்

29

 ஒற்றை

காலடித்தடமே

 புத்துலகை

 வரைந்தளிக்கின்றது

உலகே பின் தொடரினும்

குருதி வழிய நடந்த

 முதலடியே மேன்மையானது

30

வெள்ளை நிறத்திலோர்

 கோலமிடுவாள் அன்னை

அச்சிட்ட பூக்களாய்

தெருக்களை அலங்கரிக்கும்

கல்வி வாசனையறியாத

விரல்களில் வழியும்

 புள்ளிகளும் கோடுகளும்

 அதை இணைக்கும்லாவகமும்

அவள் கற்றிருந்த

காலக்கணிதத்தை

கண்முன் நிறுத்தும்

வாழ்வு வண்ணமற்றிருந்தாலும்

 விதவிதமான

 வெண்ணிறக் கோலங்களிலே

வெந்து திருநீறானாள்

31

நீங்கள்

 எங்கிருந்து வேண்டுமானாலும்

 துவங்கி கொள்ளுங்கள்

உங்கள் நாடகங்களை

நீங்கள் நடித்து பழகுவதற்காக

 திறந்தவெளி மைதானமாய்

 எங்கள் மார்புகள்

உங்கள் துப்பாக்கி ரவைகளை

 ஏந்துவதற்கு காத்திருக்கின்றன

திரைச்சீலைகளை துவக்கியதிலிருந்து

பிணங்களாகவே வந்து விழுகின்றன

நாடகம் முடிந்தபின்

உங்களுக்கான முடிவுரையை

 பார்வையாளர்கள் எழுதிச் செல்வார்கள்

சர்வாதிகாரிகளின்

 மரணக்குறிப்புகளைப் போல...

32

விளையாட

 நிலவைகையில் கொடுத்தால்

அது நீருக்கடியில்

ஒளித்து வைக்க

 முயற்சி செய்கிறது

காரிருளின் அறியாமையை

 பரிகாசம் செய்தபடி

நீருக்குள் துள்ளியோடுகிறது

மீன் கூட்டமொன்று...

 33

வெட்டி வீழ்த்தப்பட்ட

 துளிர்க்கவியலாத

 மரக்கிளைகளில் கூட

 கணநேரமேனும் வசந்தங்கள்

 வந்தமர்ந்து போகின்றன

மீண்டுமொரு

வனம் துளிர்க்க

சிறகுகளின் ஆசிர்வதம்...

34

 பகலெலாம்

ஓடோடிய ஊர்

 உறங்கச் சென்றுவிட்டது

நடந்துபோன

 ஊரின் நடத்தையை

வெளிச்சம்போட்டு

 காட்டிக்கொண்டிருக்கிறது

இரவுப் பனியில் நனைந்தபடி

மின்விளக்குகள்...

35

வனமிழந்த கோபமோ?

 மண்வாரித் தூற்றுகிறதே

அடர்காட்டின் ஆதிமகன்...

 36

 நிமிர்ந்தே

 நிற்க பழகியவர்களின்

வளைவுகளற்றவாழ்வு

வனப்பிற்குரியது

வளமற்றதெனினும்

நடுங்காததால்

நலமுற்றது...

37

 நதிகள்

சொல்லிப் போன

 ரகசியங்கள் யாவும்

அடைகாத்து வைத்திருக்கின்றன

 கூர்மை இழந்த கூழாங்கற்கள்

அவை பேசத் துவங்கினால்

 உலகம் ஒருநாள்

வாயடைத்து நிற்கக்கூடும்...

38

 மார்கழிப்பனியில்

 நனைந்தொலிக்கும்

ஆலயக் குயில்கள்

அதிகாலைப்பொழுதுகளை

 ரம்யமாக்குகின்றன

 பக்தியற்ற மனங்களை கூட

இசை ஈஸ்வரிகள் செவிவழியே

 அம்மன்களை இதயத்திற்குள்

 நுழைத்துக்கொண்டிருக்கிறார்கள்

 இசைக்கேதுபக்தி...

39

 நீங்கள்

 எங்கிருந்து வேண்டுமானாலும்

துவங்கி கொள்ளலாம்

பிரபஞ்ச சுழற்சியில்

 கணிதமெலாம் ஓர் காலப்பிழை

நீள்வட்டப்பாதையில்

 உலகம் சுழன்றோடும்

காலத்தை மெல்ல நகைத்தபடி...

40

காலம் எழுதும்

சுருக்கெழுத்திலிருக்கின்றது

 நீங்கள் வாழ்ந்ததற்கான

முகவரி

41

 முகநூல்

சிறை புகுவதும்

சிறு பறவையென

 திறந்தவெளியில்

 சுற்றித்திரிவதும்

 வலைதளப் பூட்டின்

சாவிகள் யாவும்

அவரவர் அறிவு வசமே உள்ளது

 நேரக் கட்டுப்பாடுடையோர்

வாழ்வை காப்பர்

42

 உலகை

வேடிக்கை பார்ப்பது கூட

சுவாராசியமாய் தான் இருக்கிறது

தொடு வானங்கள்

கானல்நீர் கனவுகளாய்

நீர்த்துப்போகையில்

வேறு என்னதான் செய்வார்கள்

 வாழ்வற்ற ஏதிலிகள்

 43

 குறுக்கும் நெடுக்குமாக

வளைவும் நெளிவுமாக

எத்தனையோ பாதைகள்

மறைந்து கிடக்கின்றன

சிகரம் தொடுவோர்க்கு மட்டுமே

 அப்பாதைகள் புலானாவதன்

 சூட்சுமம் மட்டும்

 தெரிவதேயில்லை...

44

 பசித்தீயில்

 கருகிவிடுகின்றன

 உலைக்களங்கள்

 45

 அறியாமை காரிருளில்

கேள்வி கேட்பாரின்றி

காற்றிலாடி ஒளிர்கின்றன

மகர தீபமர்மங்கள்...

46

 ஒரு

சொல்லுக்கு பறந்தோடி

 வருகின்ற கூட்டம்

 சிறு கல்லுக்கு

விரைந்தோடிவிடுகின்றது

 சொற்களினும்

கற்களின் வலிமை

 ஆகப் பெரிதாகிறது..

47

 வீரமென்பது யாதெனில்

கூரிய கொம்புகளுடன்

 போரிடுவதன்று

நேரிய வழிநின்று

 சீரிய வாழ்வினை

யாவர்க்கும் தீதின்றி

 செம்மையாய்

வாழ்ந்து முடிப்பது...

48

 உருமாறும் ஓவியங்களை

மேகங்கள் வரைய

 ஆகாயம் அழித்து விளையாடுவதை காண

நீங்களொரு வானவில்லாய்

மாறிடவேண்டும்...

49

 புலி வேடம் போட்டாலும்

கழுதைகள் தனை மறந்து

கனைத்து விடுவதால்

அசிங்கப்பட்டு திரிகின்றன. –

50

 வாழ்நாள் முழுவதும்

வாடகை வீட்டில்

வசித்துச் சாகின்ற

 ஏழைகள் யாவர்க்கும்

தூக்கணாங்குருவியின்

கூடுகள் கூட

 கொடுங்கனவுதான்...

51

 நிலவின்

 ஒளிக்கிரணங்கள்

நடைபயிலும் நள்ளிரவில்

ஓங்கி உயர்ந்த

அடர்வனத்தின் ஊடே

 காயப்பட்ட மரங்களுக்கு

மாமருந்தாய்

ஆரத்தழுவுகின்றன..

 52

 சொற்கள்

வாதையுடன் இருக்கையில்

கவிதைகள் கூட

 கண்ணீர் விடுகின்றன...

53

ஆழ்கடலும்

 நீள்வானமும்

தனித்துவிடப்படுவோரின்

துயர் தீர்க்கும் உரையாடலும்

 மெளனப்பெருவெளியும்

ஏதிலி மானுடர்க்கு

ஆகச்சிறந்த ஆறுதல்...

54

 ஒரு

வெற்றுப் பூக்கூடையை

அழகுபடுத்திவிடுகின்றன

 மழலையாய் சிரிக்கும் மலர்கள்.

55

 புடைசூழ வாழ்ந்தவர் கூட

ஏதேனும் ஒரு சூழலில்

தனித்திருத்தலுக்கு ஆளாகிறார்கள்

 வெறுமையை துரத்திவிட

வானளக்கும் சிட்டுக்குருவிகளும்

வாலாட்டும் நாய்க்குட்டிகளும்

 துயர்தீர்க்கும்

 அருமருந்தாகின்றன...

 56

உரையாடலொன்று

 விவாதமாகிப்போன சொற்களமொன்றில்

அங்கே வழிந்தோடிய ரத்தத்தை

 சாத்தான்கள்

நக்கிகொண்டிருந்தன

ஒரு உரையாடல்

கொலை செய்யப்பட்டசபையில்

காயமுற்ற சொற்கள் யாவும்

 தேம்பி அழுதுகொண்டிருந்தன

 ஆறுதலின்றி

57

தேவதைகள் கையிலேந்தும்

வெளிச்சத்தில்

 புலரும் புன்னகை

வாழ்வின் இருண்மையை

வதை செய்கின்றது

ஒளிப் பூப்போல..

58

 ஒற்றை வார்த்தைகளால்

தூக்கி எறிந்துவிட முடிகின்றது

 களிறுகளின் கோபம்

உலகை வதம் செய்யவல்லது

மதங்கொள்ளாதீர் மிருகங்களே...

59

 உழைப்பவர் கையில்

 சுழலும் உலகம்

 பிழைப்பவர் பையில்

சேர்வதில் இருக்கின்றது

சுரண்டலின் சூது...

60

 கிடைக்கும் வாகனமெல்லாம்

ஏறி பயணிப்பீர்கள் என்பதற்காக

உங்களுடன் ஊர்வலம் போக

எளிய மனிதர்கள்

 ஒருபோதும் பச்சோந்திகளாக

நிறம் மாற போவதில்லை...

61

 உன்

கால்கொலுசுகளால்

 என் மௌனங்கள் உடைபடுகையில்

சபித்திட தோன்றவில்லை

உனைவிடவா

வரங்கள் பெரிதெனக்கு...

 62

 மெளனம்

 யுத்தங்களின் களமழிக்கும்

பேராயுதம்...

63

 ஆற்றில் குதிக்காதவரை

 நீந்தியோடும் மீன்களை

கரையில் நின்று

 கையசைக்க மட்டுமே முடியும்

64

தோளேறி

வானம் பார்த்தவர்கள்

 பறக்கத்துவங்கியபின்

 செய்யும் முதல் வேளை

தோளேற்றியவர்களின்

 சிறகு முறிப்பதுதான்...

65

 தேசத்தின் ஆன்மாவை

 தெருவினில் வீசியெறிந்து

இறையாண்மை

 கீதமிசைக்கிறார்

 ஜால்ரா நாயகர்கள்

அது ஈனஸ்வரமாய்

வழிந்தோடுகிறது

 66

 அவரவர் காடு

 அவரவர்கனி

தின்ற பழத்தின்

தித்திப்பைவிட

 நெஞ்சில் குத்தியமுள்ளே

நினைவிலாடுகிறது

 67

 அரசூழியஞ்செய்வோரில்

ஆகப் பெரும்பான்மையர்

யாசகம் எடுத்தே பிழைக்கின்றனர்

ஏழைகளின்

 குருதி ஊற்றியே

பச்சைநிற கையொப்பமிடுகிறார்

 68

 கையறுநிலையில்

 எரிபொருள் நிரப்பும்

 வாகன ஓட்டிகளின்

வெப்ப பெருமூச்சு

தேசமெங்கும் படர்கின்றது

அரசுகள் எரிந்து

பிடி சாம்பலாகலாம்

 69

 சாலையோர ஓவியன்

கடவுளை வரைகிறான்

உயிர்பித்த கடவுள்

 கையேந்துகிறார்

 நிறைகிறது

 தூரிகை வயிறு

 70

 தந்தையின் அனுபவங்கள்

பாடங்களாகும்போது

 படமாகிவிடுகிறார்

71

 சம்பல்

பள்ளத்தாக்கு

 கொள்ளையர்கள் போன்றது

 நீங்கள் கடக்கும்

சுங்கச்சாவடிகள்

72

காலம்

தன் சிறகுகளை உதிர்த்து

 உலகை புதிதாய் உமிழும்

 உதிர்ந்த சிறகுகள்

 காலச்சக்கரமேறி

வானில் உறையும்

73

 ஒரு

 மழைப்பொழுதில்

 வந்து சென்றவானவில்லாய்

 தடம்பதிக்காமலேயே

 சென்றிருக்கலாம்

74

 கைபேசிகளின்

 பேச்சொலியில்

மௌனத்தில்

 உறைந்துபோயின

 தொலைபேசிகள்

75

 ஒரு சிறுமழை

போதுமானதாக இருக்கிறது

ஊழல் சாலைகளை அம்பலப்படுத்த

குண்டும் குழியுமாக

 சாலையெங்கும்

பெருகியோடுகிறது

 76

 ஒப்பனையற்ற

வீடுகளும்

 முகங்களும்

மிக அழகானவை

77

பூமியிலிருந்து குதித்து

தற்கொலை செய்ய

 நினைத்தபோதெலாம்

உனதன்பே

 ஈர்ப்புவிசையாய் பிடித்து

 நிறுத்தியிருக்கிறது

78

மழையில்

 நனைந்ததற்காக

 மாராப்பு சேலை எடுத்து

துவட்டுகிறாய்

துவட்ட துவட்ட

நனைகிறது மனசு

79

 ஒற்றைமுகத்தினுள்

 ஓர் நூறுகோடி

முகமூடிகள்

 வைத்தலைய விடுகிறது

வாழ்வு

 80

 ஒரு

 தகப்பனின்

 சுயசரிதையை

 அந்திம காலத்தில்

பேரன்களே

நிறைவு செய்கின்றனர்

81

சேறு படிந்த வாழ்வின்

 புன்னகையில் ஒளிர்கிறது

 உலகிற்கு

 சோறிடும் அன்னையின்

கைகளில் வழிந்தோடும்

அன்பின் ஈரம்

82

 சொற்களை

 திருடிகொண்டு போகிறவர்கள்

 மெளனங்களோடு

உரையாட முடியாது

83

 நீரருந்தும் பறவையொன்று

தன் தூரிகையால்

குளத்திலொரு

 சித்திரம் வரைகிறது

84

 உங்கள்

போர்களின் நீதி கூட

யுத்தத்தில் வீழும்

 பிணங்கள் முன் அநீதியாகும்

ரத்தக்கறைபடிந்த

உங்கள் நியாயங்கள்

கல்லறைகளை

 ஒருபோதும் உயிர்ப்பிப்பதில்லை

85

 புடைசூழ வாழ்ந்தவராயினும்

 தனித்திருத்தல் எனும்

தவத்தினுள் மூழ்கி யோர்க்கு

தனிமையே ஓர் வரம்

86

 தொலைதூரத்து கனவுகளில்

தொலைகிறது காலம்

 உறக்கமற்ற கண்கள்

 உதிர்ப்பதில்லை நீர்வழித்தடங்களை

மிச்சமிருக்கும் கனவுகளாவது

வெம்மை

 குறையாதிருக்கட்டும்

87

கடிவாளமற்று

 கட்டவிழ்த்தப்படும்

குதிரைகளாய்

பாய்ந்தோடும்

சொற்களிலிருந்து

எதிரிகள்

 தங்களுக்கான ஆயுதங்களை

 தயாரித்து கொள்கிறார்கள்...

88

 கூழாங்கற்களாய்

வாழ்வின் துன்பங்களை

அடுக்கி நிமிர்கையில்

புத்தன் மிளிர்கிறான்...

 89

 நிமிர்ந்தெழ முடியாத

சுமைகளை ஏற்றிவிட்டு

வாழ்வை

 கூனலாக்கிவிடுகிறது

காலம்...

90

கடவுள் பொம்மைகளோடு

கடைவிரிக்கும்

 மதவியாபாரிகள்

 விற்று தீர்க்கும்

பொய்களில் இருந்து

 உருவாகிறது

 மனிதர்களின் பேரழிவு...

 91

 சாத்தான்களை

 எழுப்பிவிட்டு

பதுங்குகுழிக்குள்

 ஓடி ஒளிகிறார் கடவுள்

 போர்க்களமெங்கும்

வழிந்தோடும் குருதிகளை

 நக்கிச் சுவைக்கின்றன

மிருகங்கள்

92

 தலித்தென்றால்

அதிகார துப்பாக்கிகளும்

ஆணவமாய்

 உயிர் துப்புகிறது...

93

ஆதித் தொல்குடி

சமூகத்தின்

 மோப்ப மின்னும் தீரவில்லை

 மூதாதையர்களை தேடி

 காடுகளுக்குள் பயணிக்கின்றன

 வாழ்ந்து மடிந்து

தெய்வமானவர்களால்

 சிவக்கின்றன ராத்திரிகள்...

94

 அப்பாவின் கனவுகள்

 பரணில்

தூசு படிந்து கிடந்தன

துடைத்ததில்

ஒளிர்ந்த

 என் முகம் கண்டு

மகன் சிரிக்கின்றான்..

95

 நாட்டின் சொத்துக்களை

விற்று சூறையாடும்

கள்ளத் தரகர்களுக்கு

 எங்கள் நாட்டில்

நிதி மந்திரிகள்

 என்று பெயர்...

96

 சூதாடிகளிடம்

 நாட்டை கொடுத்தார்கள்

 அவர்கள்

தேசத்தையே

 திருவோடாக்குகிறார்கள்

97

 பட்டியிலிருந்து

 தப்பிய ஆடுகள்

 கசாப்பு கடைக்கு

போக வேண்டும் என்பதில்லை

 சிறுகாட்டை கூட

உருவாக்கலாம்

98

 நடமாடும்

 அடர்வனத்தின்

 தலையில் இட்ட

தீயின் பிளிறல்

இரவுகளை கொலை செய்கிறது

 99

 உழவனின்

கோவணத்தை உருவி

 முதலாளிகளுக்கு

 தலைப்பாகை கட்டுகிறது

அரசு...

 100

 புதிர் மிகுந்த வாழ்வை

 வாழ்ந்து முடிக்கையில்

யாராலும்

 புரிந்துகொள்ள முடியாத

சித்திரத்தை

கையில் தருகிறது காலம்...

101

 தனிமையின்

மரத்தடியில் கிடைப்பதில்லை

வாழ்வின் நெருக்கடிகளில்

கிடைக்கிறது ஞானம்...

102

 நள்ளிரவில்

 ஒளிரும்

கைபேசி வெளிச்சங்களால்

 இருளாகிறது வாழ்வு...

 103

 மாமன்னர்

ஏற்றி மகிழ்ந்த

காற்றிலாடும்

 தேசியக்கொடியின்

 கயிற்றிலாடுகிறது

உழவன் வாழ்வு...

104

 ஒரு

 கதைசொல்லி

வரைந்து காட்டும்

வார்த்தைகளில்

 உயிர்பெறுகிறது

வாழ்வு...

105

 என்று தீரும்

கொதிக்கும் உலையிலிருந்து

பொங்கிவழியும்

உழவனின்

கண்ணீரை சுவைத்து மகிழும்

பேயரசனின் பெரும்பசி ...

106

 குளத்தின்

ஆழ்துயிலை

 சிறு கல்லால் கலைத்துவிட்டு

வேலைக்கு செல்கிறான்

சிறுவனொருவன்...

107

 நடை மறந்து

போகிறார்கள்

 வழிகாட்டி மனிதர்கள்

108

 ஒரு அரசாங்கம்

 பொதுமக்களிடம்

நூதனமாக திருடுவதை

 நீங்கள்

 எரிபொருள் நிரப்புகையில்

காணலாம்...

109

 சதுரங்கத்தில்

 மாயக்கரமொன்று உலவுவதை

 வெட்டுப்பட்ட ராணியும்

இனி பலியாகப் போகும்

படைகளும் அறியும்...

110

மதுபான விடுதிகளில்

 ஊற்றிகொடுத்துவிட்டு

சாலைகளில்

 வாயை ஊதச் சொல்லி

வழிப்பறி செய்கிறது அரசு...

111

 கோப்பையின்

 வெற்றிடத்தில்

 எதை நிறைக்கிறோம்

என்பதில் இருக்கிறது

வாழ்வின் பொருள்...

112

தேசம் நோயுற்றபோது

கருவூலத்தின்

கதவை சாத்தியவர்கள்

 தேர்தல்காலத்தில்

 ரெயில் திருடர்களாய்

மயக்கமிட்டாய் தருகிறார்கள்...

113

 எலிகளிடமிருந்து

 தானியங்களை பாதுகாக்க

 பூனைகளை நியமித்தால்

அது கள்ளச்சந்தையை

திறந்துவைத்து

 வணிகம் செய்வதிலேயே

 குறியாய் இருக்கிறத

|114

வானமே கூரையாய்

வாழுகின்ற ஏழைக்கு

 நள்ளிரவு மழை

ஒரு நரகம்

எல்லோருக்குமான மழையை

 எல்லோராலும்

ரசிக்க இயலாது...

115

 உணவு தந்த உழவனுக்கு

பேரரசன் நீட்டும்

நஞ்சுக்கோப்பைகளால்

 விவசாயியின் வாழ்வு

ஊசலாடுகிறது...

 116

காலத்தின்

 பிரக்ஞையின்றி

சுழல்கிறது பிரபஞ்சம்

உலகம்

 காலண்டர்கள் தயாரித்து

கூத்தாடுகிறது...

 117

நிலவற்ற இரவுகளில்

உலா வருகின்றாய்

ஒளிர்கிறது இருள்

118

வன்முறைகள் குறித்தான

 நீங்கள் வரையும் ஓவியத்தில்

புலிகளின் படுகொலைகளில்

தெறித்து விழுந்த

 ரத்த துளிகளின்

வண்ணங்கள் குழைத்தே

வரைவதொன்றுதான்

சித்திரத்தை முழுமையாக்கும்..

119

 வாழ்வை கடப்பதற்கான

சூட்சுமங்களனைத்தும்

கயிற்றின்மேல் நடக்கும்

 கழைக்கூத்தாடி சிறுமியின்

 கண்களில் ஒளிர்கின்றது...

120

 சுவைகளை

 இழந்த நாக்குகளை

வழங்கிவிடுகிறது நோய்மை

 பரம்பரை சொத்துக்கள்

இருக்கிறதோ இல்லையோ

மரபுவழி நோய்கள்

பிரிவினை ஏதுமின்றி

முழுதாய் கிடைக்கின்றன...

121

 மூங்கில் காடுகளில்

கசிகின்ற காற்றிலும்

குழலின் கீதம்...

122

 இடுப்பில் சொருகும்

 சுருக்குப்பைகளே

அம்மாவின் கஜானாக்களாக இருந்தன

 கருவறையின் கருவூலத்திலிருந்து

வற்றாத ஜீவநதிகளாய்

பொற்காசுகள் கொட்டிக்கொண்டே

இருந்தன

பொறுக்கிகொண்டே திரிந்த

எங்களுக்கு

 பொருளாதார சுமைகள் ஏதுமில்லை

 123

நதியிலோடும்

நீரை

கையில் அள்ளினேன்

வழிந்தோடுகிறது

காலம்...

124

 புகைபடிந்த

 அடுப்பங்கரையிலிருந்து

 இறுதிவரை

 மீட்கவே முடியவில்லை

இரப்பைகளில்

 இருள் படியாமல்

உணவு வெளிச்சம்

பாய்ச்சி சென்ற தாயாரை...

125

 வைகையாற்றின்

 வெள்ளப்பெருக்கில்

 நீந்தி கரை சேர்ந்தவள் என

வெள்ளந்தியாய்

கதை சொல்வாள் அம்மா

 வாழ்வெனும்

பெருவெள்ளத்தில் மூழ்கி

 போனதறியாது...

 126

 ஒரு துளி கண்ணீரை

 திருகிவிட்டு

 போய்விடுகிறார்கள்

 அது பெரும் கடலாகி

 வாழ்வையே

 மூழ்கடித்துவிடுகிறது

126

கோடரியால்

 வீழ்த்தப்பட்ட மரத்திற்கு

 துளிர்களால்

 ஆறுதல் பூசுகிறது

வேர்....

 127

 யானைகள்

 உலா போன வாழிடங்களை

 குழிதோண்டி புதைத்து

 தார்ச்சாலைகளான

சமாதிகளை எழுப்பி

மலர்கள் தூவ மரங்களை

 நட்டுவைத்திருக்கிறார்கள்...

128

ஆற்றங்கரையோர

ஆக்கிரமிப்புகள் அகற்றும்

 அதிகாரத்தின் கரங்கள்

எளியோரை

 வேரோடு புடுங்குகின்றன

வலியோரின் பாதங்களை

நாவால் நக்கி பிழைக்கின்றன...

129

எவரையும்

தூக்கிச் சுமக்காதீர்கள்

அடிமைச் சேவகம்

எஜமானர்களுக்கு

கால்கள் இருப்பதையே

 மறக்கடித்துவி.டுகிறது...

130

முகமூடிகளால்

ஆனது உலகு

அகம் மூடியோரே

முகம் மூடுவர்

உள்ளும் புறமும்

ஒப்பனையற்றோரை

 காண்பதறிது ...

131

 உங்களை நீங்களே

வரைந்து கொள்ளும்

 வாழ்வெனும் சித்திரத்தை

நிறைவு செய்கையில்

 நீங்களிருக்கப்போவதில்லை

 மதிப்பீடு செய்யும் பார்வையாளர்

 கையிலிருக்கிறது

நீங்கள் வரைந்த

 உங்களின் வாழ்வு

132

 அம்மாவைப் போல்

 நினைவுகூறத்தக்க

எவ்வித அடையாளமற்றுத்தான்

அப்பா

 நிழற்படமாய் உறைந்துபோனார்

நடுத்தர வயதுகளில்தான்

 தாயாரின் அன்பினுள்

தகப்பனும் வாழ்ந்திருக்கிறார் என்பது

உறைக்கிறது...

 133

 விரைந்து செல்லும்

 முதிய பயணியின் மூட்டைக்குள்

 இறந்துபோகாத

இளமையின் கனவுகள்

உயிரோடிருக்கலாம்...

134

 பசியில் செத்தவர்களை

படையலிட்டு

 கரைந்தழைக்கின்றார்கள்

பாவச்சோறு என்றறிந்து

 காதுகேளாதவாறு

 மரக்கிளையை இறுக பற்றி

அமர்ந்திருக்கிறது

 கருங்காகமொன்று...

135

 உளவறியும்

நிழலை உலகறியும்

 சந்தேகச் செவிகள் எப்போதும்

 எதிரியின் உதடுகளில்

 கூர்தீட்டி வைத்திருக்கும்

தன் காதுகளை நம்பாத

 ஆதிமனிதனின் அற்பத்தொழிலிது

.136

 சின்னஞ்சிறு

 மின்மினி பூச்சிகளின் வெளிச்சத்தை

களவாடும்

 இணைய உலகின் சூதறியாது

 சிறகிழக்கும் சிறார்கள்

|37

 உலையிலிடப்படும் அரிசி கூட

 பானையிலிட்டால்

பொங்கி வழிகிறது

குக்கரில் வைத்தால்

விசிலடித்து அலறுகிறது

 எரிபொருள் விலையேற்றங்கள்

வாழ்வையே எரித்தாலும்

அதிகாரத்திற்கு முன்

ஊமையாகவே உலவுகிறீர்கள்

 நீங்கள் எழுப்பும்

கேள்வியில் இருக்கிறது

உங்களின் விடுதலை

138

துயர்களின்

 மீதேறி ஊர்கிறது

வாழ்வெனும் பெருநகரம்

 படரும் பசுங்கொடிகள்

 நொடிப்பொழுதில் மடிவதறியாது

வேடிக்கை காணும்

 பெரும் கூட்டம்

காட்சிப் பிழை...

 139

 வன மென

மக்களின் கோபம்

 அணிதிரள்கையில்

 காடுகளை தின்று செரித்தவர்களை

யானையின் வாயிலிடப்பட்ட

 புற்களாய் அரைபடலாம்...

140

வானை அளப்பதற்கு

பறவையின் சிறகுகளே

போதுமானதாயிருக்கிறது.

 141

 கணநேரத்தில்

 கைதவறிவிடுகிறதுவாழ்வு

 எந்த ஆறுதலும்

 மீண்டெழப்போதுமானதாக

இருப்பதில்லை

 காலம் ஏதேனும் அதிசயங்களை

ஏற்படுத்தினாலன்றி

 எவராலும்

 காயங்களிலிருந்து

 விடுபடுதல் சாத்தியமன்று...

 142

 உருவமற்ற

 உணர்வெளியாய்

நம் கண்ணீரிலும்

 புன்னகையிலும்

 தோள்மீது கைவைத்து

ஆற்றுப்படுத்துகின்ற

 காற்றலைக்கு

 அன்பு வாழ்த்துக்களை

எந்த குயிலும்

பாடி விடுவதில்லை

 143

 வரைந்து முடிக்காத

ஓவியங்களாகத்தான்

 மண்ணில் உலவுகிறார்கள்

 மனிதர்கள்

 நீங்கள் எவ்வளவு முயன்றாலும்

 அவர்கள் மறுபக்கத்தை

வரைந்துவிட முடியாது...

144

 எல்லோரிடத்தும்

அணிந்து கொள்ள

 முகமூடிகள் இருக்கின்றன

நீங்கள்

என்னவாக நடிக்கப்போகிறீர்கள்

என்பது

 எதிரே அணிந்து வருபவர்

முகத்திலிருக்கிறது...

145

 மாமன்னரிடம்

புன்னகை இருக்கின்றது

 மக்களிடம்

 கண்ணீர் இருக்கின்றது

எல்லோரின் சட்டை பைகளிலும்

நமுத்துப்போன

தீக்குச்சிகள் இருக்கின்றன

எரிபொருள் நிரப்பும் நிலையங்கள்

எப்போதும்

 அமைதியில் உறைந்திருப்பதில்லை

சரித்திரம் சர்வாதிகாரிகளை

 நஞ்சருந்தித்தான் கொல்கிறது...

146

மேய்ப்பனை நம்பி

பயணிக்கும்

 மந்தை ஆடுகளுக்கு

 எப்போதும்

துரோகமே செய்கிறான்

கசாப்பு கடை தாண்டி

 அவன் கால்கள் செல்வதில்லை

 தலைநிமிரா ஆடுகள்

 வாழ்வதுமில்லை...

147

 காலப் பேரேட்டில்

உங்களின் பாத்திரம்

எத்தனாவது பக்கத்தில்

முடியப்போகிறது என்பது

 உங்களுக்கே தெரியாது என்பதுதான்

 வாசிக்கும்

 வாழ்வின் சுவாரசியம்

148

 ஒரு

 தேநீர் கோப்பையின்

எந்த மிடறுகளில்

ஒளிந்துகொண்டிருக்கிறது

 உயிர்களின் வாழ்வு...

 149

நள்ளிரவில்

ஊளையிடும் நாயகள்

ஊரின் மரணங்களை அறிவிக்கும்

கால தூதன் என்பார்கள்

இரவு உரையாற்றும்

 பேரரசரும்

 பெரும் பீதியூட்டுகிறார்...

150

 சொற்களுக்குள்

தொலைந்துபோனவர்களை

 காலம் மீட்டெடுத்து

 ஆழ்கடல் முத்துக்களை

கையில் அள்ளி

 தந்துவிடுகிறது..

151

 எவரும்

மூச்சை நிறுத்திவிடாதீர்கள்

 ஊழியின் காலம்

 முடியும்வரை

நமது காலம்

முடிவுறாதிருக்கட்டும்...

152

 ஒற்றை மீனுக்காய்

தவமிருக்கும் கொக்குகள்

 குளமெங்கும்

செத்து மிதக்கும்

பிணங்கள் கண்டு

 திகைத்து நிற்கின்றன..

153

 உயிர்காக்கும் வாயுக்களை

 திருடி விற்கிறார்கள்

 தடுப்பூசிகளை

கள்ளச்சந்தையின் விலையேற்றுகிறார்கள்

 பெருந்தொற்றால்

 மரணித்து கிடக்கும்

உடல்கள்

 மயானங்களில் விரைத்து கிடக்கின்றன

பொதுமக்களின் வாதை

ஆள்வோர்களுக்கான

 பெரும் போதையாயிருக்கிறது

 இரவு நேர உரைகளாவது

கோமாளிகளை போல

குதூகலமூட்டுவார்களென்றால்

அங்கேயும்

 நஞ்சூற்றித் தருகிறார்

நம் பேரரசர்

154

புலம்பெயர்வோரின்

 கண்ணீரால் ததும்புகிறது

ஆழ்கடல்

கரையோரத்தில்

 ஈரவிழிகளுடன்

 வழியனுப்புகிறது

ஊமைச்செந்நாய்...

155

 யாரோ இருவர்

பேசிச் சென்ற

 ஞாபகங்களிலிருந்து

மீண்டெழ முடியாமல்

 அமர்ந்திருக்கிறது

 காலத்தின் நாற்காலி...

156

 வளைந்தாடும் சாலைகளில்

நெளிந்தாடும் மழைத்துளிகளில்

உயிர் நனைய அமர்ந்திருப்பதும்

 ஓர் தவமே...

157

 ஊர்க்கறைகளை

 ஆற்றங்கரை தனில்

அடித்து துவைப்போரின்

வாழ்வு என்றுமே வெளுத்ததில்லை

158

 கடவுளின் வாசலில்

 ஏழைகள்

 திருவோடு ஏந்துகிறார்கள்

 எல்லாம் வல்ல இறைவனின்

 பெருங்கருணை

யாசகத் தட்டினில் விழும்

சில்லறை சத்தத்தை

 இசைப்பது மட்டுமே...

159

 கற்சிலைகள்

 உயிர்பெற்று வருமளவு

 மனமுருகி வேண்டுகிறார்

தன்னிலை மறந்த

பக்தையொருத்தி...

160

 அன்பே

 உங்களது ஆயுதமென்றால்

அங்குசங்களின்றி

 யானை கூட

 சேவகம் செய்யத் துவங்கிவிடும்

161

 யானைமீதேறி

வண்ணக் குடைபிடித்து

நடமாடும் தேரமர்ந்து

 அவனியெங்கும்

 பவனி வருபவன்

 அரசர்க்கும் கிட்டாத அணிவகுப்பு

நாடற்ற ராசாவின்

ராஜமரியாதை

 162

 தனித்திருக்கும்

 தேநீர் குவளையொன்று

 நிரப்பவியலாத

 தன் வெறுமையை

ஒவ்வொரு மிடறுகளாய்

 விழுங்கிகொண்டிருக்கும்

163

 யாவர்க்கும்

 அருள்பாலித்து

மலையேறுகிறார்

கள்ளழகர்

வைகை நதி

சலனமற்று ஓடுகிறது

164

 நூலக அலமாரியிலிருந்து

 புலம்பெயர்ந்து

 சென்ற புத்தகங்கள் யாவும்

 மீண்டும் தன்

கூடடைவதேயில்லை...

 165

 பிறர்

 தோளேறி

வானேறியவர்கள்

 முளைக்கும்

புதிய சிறகுகள்

 முதலில் துண்டிப்பது

தோளேறிய கால்களையே ...

 166

புத்தர் மேல்

 படுத்துறங்குவதால்

 ஆசை துறக்க வேண்டியதில்லை

எப்போதும்

புலியின் கண்கள்

 இரையை நோக்கியே

விழித்திருக்கும்....

 167

மனம் நெகிழ்ந்துருகி

 காற்றிலாடும்

சக்கரை தீபங்களில்

வேண்டுதல்கள் யாவும்

 நம்பிக்கை சுடர்களாக

 ஒளிர்கின்றன.

168

குயில்கள் பாடுவதோடு

நிறுத்தி கொள்கின்றன

கழுதைகள் மட்டுமே

சுரம் பிரித்து

கனைத்து திரிகின்றன  .

169

 ஆசை துறக்காத

சிற்பியின் உளிகள்

பேராசையோடு

 பெருங்கல்லில் வடித்திருக்கிறது

போதிமரப் புத்தனை

170

 சாமிகளை சுமந்தபடி

நகர வீதிகளை

வலம் வந்த தேர்கள்

 நிலைபெறுகின்றன

 நம்பிக்கைகளை சுமந்த

எளியோர்களின் வாழ்வு

காலமெலாம் உருண்டோடுகிறது...

171

 கனமழை

கொட்டித் தீர்த்தபின்னும்

 ஈரமிக்க இலைகள்

கண்ணீர் சிந்துவதை

 நிறுத்துவதேயில்லை...

172

நள்ளிரவு பயணத்தில்

மிகசன்னமாக எழும்

 ரகசிய உரையாடலில்

 எதிர்முனையின்

 உடைந்தழும்

வேதனை குரலினை

கேட்க நேர்வது

 இவ்விருளின் இருண்மையை

 அடர்த்தியாக்கி செல்கிறது..

 173

 மனசெங்கும் மயிற்பீலிகள்

நிரம்பிவழிகையில்

உங்கள் தூரிகையால்

ஒரு வண்ணக் சிறகினை வரைந்து

வானத்தில்

 சிறகடிக்கவிடமுடியாது...

 174

 வெடித்தழும்

 மழை மேகங்களுள்

யாரும் அறியாதவாறு

கரைந்தழுகிறார்கள்

பகிர முடியாத

துன்பக்கேணிகளை

 சுமந்தலைபவர்கள்...

175

 காற்றிலிருந்து

 நூல் பிரித்து

சிலந்திகள் செய்யும்

 சித்திர வலையில்

 சிக்கிய மானுடர் கண்கள்

பசையாய் ஒட்டிகொள்கிறது...

 176

 கசாப்புகாரன்

 மிகலாவகமாக

 அணிதிரட்டிவிடுகிறான்

 ஆட்டிடையனின் குச்சிகளே

 குறுவாளாக மாறுவதறியாத

.மந்தையாடுகள்

தழைதின்று தலை இழக்கின்றன...

177

சாலைகளில்

 காலியான மதுப் புட்டிகளை

வீசியெறிந்து செல்கிறான்

 உடைந்து சிதறும்

 கண்ணாடி சில்லுகள்

பிரதிபலிக்கின்றது

 அவனது வாழ்வின் குரூரத்தை...

 178

 வாழ்வின் போக்கறிந்தவர்கள்

 பறவையின் இறகைவிட

மென்மையாகிவிடுகிறார்கள்

 கண்களில் உதிரும் ஈரத் துளிகளாய்

நதியலைகளையும்

 சுண்டியெறியும் திறனறிந்தவர்கள்

வாழ்வையே தவமாக்கும்

நீர்ப்புத்தர்கள்

179

 இசை பட

 வாழ்ந்தென்ன பயன்

 காலத்தோடு பயணிக்காவிடில்

 பழங் குப்பையென

தூக்கியெறியும் உலகு...

180

 ஒரு வாய் உணவு

உயிரே விலையானது

தூண்டில் மீன்...

 181

 நெடுந்தூரம்

நீந்தி வந்த களைப்பில்

 நுரைதள்ளப்படுத்திருக்கிறது

அலையாடுங்கடல்

182

முகமூடிகள்

 கழன்று விழும் காலங்களில்

முகமொரு முகமூடியாய்

உடைந்து

நொறுங்கத்துவங்குகிறது

 183

 நத்தையென

நகரும் வாழ்வில்

தலைசாய்த்து

 நிழலில் ஒதுங்க

 காளான்களாய்

வசந்தங்கள் குடைபிடித்து

நிற்கும் தருணங்கள்

வாழ்வின்

அற்புதங்களுள் ஒன்று

184

 உறைந்து கிடக்கும் நதியை

உயிர்ப்பித்திட

சலங்கை கட்டிய மீன்களாய்

குதித்தாடுகிறார்கள்

 துள்ளியோடும்

 ஆற்று நீரெங்கும்

 வெள்ளிச் சலங்கைகள்

இசை மீட்டுகின்றன...

185

 பிடிமானமற்று

அந்தரத்தில்

 ஊஞ்சல் ஆடும்

 வாழ்வு நேரிடினும்

வைராக்கியமான

வேர்களால் மட்டுமே

 வலிமையுடன்

 எதிர்கொள்ள முடிகிறது..

186

 திருவிழா

 பார்க்க போகும்

 அப்பாவி சனங்கள்

சப்பரத்தில் ஏறிவரும்

 சாமிகள்

 ஒரு நாளும்

ஏறெடுத்துப் பார்த்ததில்லை

ஏழை வாழ்வும் பூத்ததில்லை...

 187

தெருத்தெருவாய்

 சிறுவர்களை தேடியலையும்

ஐஸ்வண்டிகாரர்களின் வாழ்வு

 கால வெப்பத்தில்

 கரைந்தோடிப்போனது...

 188

 வாழ்ந்து முடித்ததற்கான

சுயசரிதையை

 வாழ்வு எழுதிவிட்டது

 மீதமிருக்கும்

நினைவு குறிப்புகளை

 விரல்கள் நடுங்க

 எழுதிக் கொண்டிருக்கிறார்

 காலத்தை துய்த்தவர்...

189

 கூரிய பாறை கற்களை

முனை மழுங்கச்செய்துவிட்டு

 சலனமற்ற புன்னகையோடு

நகர்கிறது நதி...

 190

 நீங்கள்

 விரும்பாவிடினும்

 உங்கள் மீது

 பாரங்கள் ஏறத்துவங்கிவிடுகின்றன

கூனலற்ற வாழ்வை தேட

 சுமைகளை

 கையாள்வதில் இருக்கிறது

 உங்களின் வலிமை.

191

மூளையை

 கழற்றி வைத்து

இரவு உறங்கத்துவங்குகிறது

 தனித்தொரு உலகமைத்து

நம்பவியலா காட்சிகளுடன்

களி நடனம் ஆடி

 இரவைத் துய்க்கிறது

 நிறைவேறாத ஆசைச் சட்டைகள்

அத்தனையும் அணிந்து

 ஒரு பாம்பை போல்

உரித்துப்போடுகிறது

பிணமாய் படுத்துறங்கும்.

 நமக்குள் ஊடுறுவி

 கனவுள் நடத்தும் நாடகங்கள் யாவும்

நினைவுகளால்

நிகழ்த்திபார்க்க முடியாதவை

கனவுகளை

 பிரதியெடுக்க முடிந்தால்

 உலகின்

 ஆகச்சிறந்த இலக்கியமாய்

மாறக்கூடும்...

 192

புலம்பெயர்வென்பது

 கொடுந்துயர்

வசித்த ஞாபகங்களின்

பிடிங்கிய வேரை

 அயலகங்களில்

 கிளைபரப்ப இயலாமல்

வாழ்நாளெலாம் சுமந்தலைவது

காலத்துயர்

193

 கடுங்கோடையில்

 சிட்டுக்குருவிகளின் தாகத்திற்கு

கசிந்துருகி

 கண்ணீர் வடிக்கும்

 தெருக் குழாயில்

தன் அலகுகளால் நீர் பருகும்

 பறவையொன்று...

 194

.வண்ணக் குடைகளேந்தி

 மழைப்பயணம் போகின்றவர்களை

நீரில் கரைத்து விளையாடுகிறது

செம்புயலெனப் பெய்யும்

 குறும்பு மழை...

195

 தேவதைகள்

 ஏந்தி வரும் வெளிச்சத்தில்

தகப்பன்களின் வாழ்வு

சுடர்விடுகின்றது...

 196

மழலைகளின்

குழந்தை பருவம் உரித்து

 பட்டாம்பூச்சிகளாய்

 பறக்கத்துவங்குகையில்

தகப்பன்களின்

 இளமை சிறகுகள்

உதிரத்துவங்குகின்றன.

197

 உதிர்ந்த பிறகும்

 அழகுபெறும்

ஒரு சில பூக்களாய்

இறந்தபிறகே

உயிர்பெறுகிறார்கள்

ஒருசில கவிஞர்கள்...

 198

 கடவுளோடு

 யுத்தம் செய்துகொண்டிருந்தாய்

பாமர சனங்களின்

 வாழ்வியல் இருட்டை

துடைக்க வந்தசாமி நீ

உனை சாத்தானாய்

திட்டி தீர்த்துக்கொண்டிருந்தன

வேதங்கள்...

 199

 ஒரு மழைநாளில்

கிழிசல் குடைக்குள்

ஒடுங்கிய குழந்தைகளுக்கு

எவரும் சொல்லாமலே புரிந்திருக்கிறது

சமத்துவமே உலகமென்று...

200

 ஒரு

சிறந்த தூரிகையால் மட்டுமே

 விழிகளுக்குள்ளிருந்து

 அழகிய ஓவியங்களை

பெயர்த்தெடுக்க முடிகின்றது...

201

 பாபரை புதைத்த

ராமரின் கருவறையிலிருந்து

 ஒலிக்கும் மந்திரங்களை மீறி

சன்னமாய் எழுகின்றது

தொழுகையின் விசும்பொலி...

202

 கடன்காரன் வீசியெறியும்

துர்நாற்றமிகும்சொற்கள்

மிதந்தலையும்

மேகங்களுள் புகுந்து

தேம்பியழுகின்றது...

203

 நள்ளிரவில் ஓடிப்போன

 மகளின் எதிர்காலம் எண்ணியும்

விடிந்தால்

 எதிர்கொள்ளப்போகும்

ஊரின் கேள்விகள் குறித்தும்

 இரவை நீளச் செய்யும்

ஒடுங்கிகிடக்கிறாள்

விதவைத் தாயொருத்தி...

204

 உலகின்

 எல்லாத் தெய்வங்களையும் நம்பினாள்

கடவுள்கள் யாவரும்

 கேளாக் காதினராகவே இருந்தன

வற்றிய குளமென்று

வருந்தினாலுமில்லை

 வளமுற்ற வைகையென்று

மகிழ்ந்தாளுமில்லை

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக